அமெரிக்காவில் பத்திரிகையாளரின் 3 வயது குழந்தை கடவுச்சொல் பதிவிட்டு விளையாடியதால் ஐ-பேட் 48 வருடங்களுக்கு முடங்கியுள்ளது.
லண்டன் நகரத்தை சேர்ந்த இவான் ஆஸ்நாஸ் எனபவர் அமெரிக்காவில் உள்ள ‘தி நியூ யார்கர்" இதழில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு, இவான் ஆஸ்நாஸ் தன்னுடைய வீட்டில் ஓய்வெடுத்துக்கொண்டிருந்துள்ளார். அப்போது அவருடைய ஐ-பேடை எடுத்து அவருடைய 3 வயது மகன் பயன்படுத்திக் கொண்டிருந்துள்ளான்.
Uh, this looks fake but, alas, it’s our iPad today after 3-year-old tried (repeatedly) to unlock. Ideas? pic.twitter.com/5i7ZBxx9rW
— Evan Osnos (@eosnos) April 6, 2019
அதனை திறக்க முயன்ற அந்த சிறுவன், பலமுறை கடவுச்சொல்லை பதிவிட்டுள்ளான். இதனால் அந்த ஐ-பேட் 48 வருடங்களுக்கு முடங்கியுள்ளது. இதன் புகைப்படத்தை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள இவான் ஆஸ்நாஸ், இணையதளவாசிகளிடம் உதவி கேட்டிருந்தார்.
இதனை பார்த்த இணையதளவாசிகளும் தங்களுக்கு தெரிந்து பல்வேறு யோசனைகளை பதிவிட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் இதுகுறித்து பேசியுள்ள Fixt வயர்லெஸ் பழுதுபார்ப்பு நிறுவனத்தின் தலைமை அலுவல உற்பத்தி மேலாளர் டாம் ஔலன்க்ஸ்க், 48 ஆண்டுகால முடக்கம் என்பது தீவிரமாகத் தெரிந்தாலும், இது வழக்கமான ஆப்பிள் தயாரிப்பு பாதுகாப்பு அம்சங்களின் ஒரு பகுதியாகும்.
ஆண்ட்ராய்டு சாதனங்களில் இத்தகைய நீளமான கடவுச்சொல் முடக்கம் இல்லை. ஆனால் ஆப்பிள் உபயோகிப்பவர்களிடம் இதுபோன்ற பிரச்சனைகளை பார்த்துள்ளேன்.
முதலில் 30 நிமிடங்கள் என எச்சரிக்கை ஆரம்பமாகிறது. அதனை தொடர்ந்து 5 நிமிடங்கள், 10 நிமிடங்கள், ஒரு மணிநேரம் என இறுதியில் இந்த நிலைமைக்கு வருகிறது. மீண்டும் கடவுச்சொல்லை பதிவதற்காக ஒருவர் 48 வருடங்கள் காத்திருப்பாரா என்பது தெரியவில்லை.
இதற்கான தீர்வு ஒன்று தான். அவருடைய போன் முழுவதையும் மீட்டமைக்க வேண்டும். அப்படி செய்தால் உங்களுடைய தரவுகள் அனைத்தையும் இழக்க நேரிடும் என தெரிவித்துள்ளார்.