துனிசியா நாட்டில் ஒரு வார காலம் நீண்ட ஆர்ப்பாட்டங்களுக்கு இடையே, பொலிசார் சிறார்கள் உள்ளிட்ட இளைஞர்களை வலுக்கட்டாயமாக கைது செய்துள்ள நடவடிக்கைக்கு தாய்மார்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இதுவரை ஆயிரத்திற்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டிருக்கலாம் எனவும், அவர்கள் மீது நடவடிக்கை முன்னெடுக்க துனிசியா நிர்வாகம் முயற்சி செய்வதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
பெரும்பாலும் வீடு புகுந்து கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
ஆர்ப்பாட்டங்களிலோ கலவரத்திலோ ஈடுபடாத சிறார்களை கைது செய்துள்ளது, அங்குள்ள தாய்மார்களை வீதியில் இறங்கி நீதி கேட்கும் வகையில் தூண்டியுள்ளது.
புதன்கிழமை துனிசியா நீதிமன்ற வளாகத்தில் குவிந்த தாய்மார்கள், வலுக்கட்டாயமாக கைது செய்யப்பட்டுள்ள தங்கள் பிள்ளைகளை விடுவிக்குமாறு கோரிக்கை வைத்தனர்.
இரவு நேர ஊரடங்கை மீறியதாக கூறி கைது செய்வதாக பொலிசார் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
ஆனால் அவ்வாறான நடவடிக்கைகளில் தங்கள் பிள்ளைகள் ஈடுபட்டதில்லை என தாய்மார்கள் கூறுகின்றனர்.
ஏற்கனவே பொருளாதார நிலையில் தடுமாறும் துனிசியா, தற்போது கொரோனா பரவல் காரணமாக மொத்தமாக ஸ்தம்பித்துள்ளது.
இதனால் பொதுமக்கள் வீதிக்கு வந்து போராடும் நிலை ஏற்பட்டது. ஜனவரி 14-ல் நடந்த ஆர்ப்பாட்டத்தில் திரளான பொதுமக்கள் பங்கேற்றனர்.
இதன் ஒரு பகுதியாகவே பொலிசார் கைது நடவடிக்கையில் இறங்கினர். சிறார்கள் உள்ளிட்ட சுமார் 1,000 பேர் வரையில் இதுவரை கைது செய்துள்ளதாக கூறப்படுகிறது.