குப்பைகளை நீக்காமல் விட்டாலோ அல்லது தூசிகளை அவ்வப்போது தட்டாமல் விட்டாலோ கரப்பான்கள் வீட்டில் படையெடுக்க ஆரம்பித்துவிடும்.
உணவு பண்டங்கள் எங்கு உள்ளதோ அதை உண்ண கரப்பான்கள் அதிரடியாக வந்துவிடும். இவை சாக்கடை, குப்பைக் கூடைகள், குழாய் ஓட்டைகள் ஆகிய இடங்களில் இருக்கும். இது நாம் இருக்கும் வீட்டில் குடியேறாமல் இருக்க பார்த்துக் கொள்ள வேண்டும்.
கிராம்பு
கரப்பான் பூச்சி இருக்கும் இடத்தில் கிராம்பை வைக்கலாம் அல்லது கிராம்பு எண்ணெயை சிறிதளவு தண்ணீரில் கலந்து ஸ்பிரே மாதிரி அடிக்கலாம். இதன் வாசனை கரப்பான் பூச்சிக்கு பிடிக்காது. அந்த இடத்தை விட்டு கரப்பான்பூச்சிகள் ஓடிவிடும். முக்கியமான ஒன்று அவ்வப்போது கிராம்பை மாற்றிக்கொண்டே இருக்க வேண்டும்.
சர்க்கரை மற்றும் பேக்கிங் சோடா
சர்க்கரை மற்றும் பேக்கிங் சோடாவை பாதிக்கு பாதி கலந்து, கரப்பான் வரும் இடத்தில் தூவி விட்டால் கரப்பான் பூச்சி இனிப்பை சாப்பிடவரும். சாப்பிட்ட பிறகு கரப்பான்கள் உடனே இறந்துவிடும்.
பிரியாணி இலை
பிரியாணி இலையை நன்றாக பொடி செய்து, கரப்பான் பூச்சி அதிகம் சுற்றும் இடத்தில் அப்பொடியைத் தூவ வேண்டும். இப்படி செய்தால் கரப்பான் பூச்சி நம் வீட்டை அண்டாது.
மிளகு, வெங்காயம் மற்றும் பூண்டு கலவை
மிளகுத் தூள், வெங்காய பேஸ்ட் மற்றும் பூண்டு பேஸ்ட்டை ஒன்றாக கலந்து, சிறிது தண்ணீர் ஊற்றி ஒரு ஸ்பிரே பாட்டிலில் ஊற்றி கரப்பான்கள் இருக்கும் இடங்களில் அடித்தால் கரப்பான்பூச்சிகள் ஓடிவிடும்.
போரிக் ஆசிட்
கோதுமை அல்லது மைதா மாவை போரிக் ஆசிட் ஆகியவற்ற சேர்த்து பிசைய வேண்டும். இந்த கலவையை சிறு உருண்டைகளாக பிடித்து, கரப்பான் பூச்சி வரும் இடத்தில் வைக்க வேண்டும். இவ்வுருண்டைகளை சாப்பிட்ட கரப்பான்கள் இறந்துவிடும்.